search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படிக்காசுநாதர் கோவில்"

    இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பாலுக்கு, மறுநாள் இறைவனின் சன்னிதியில் அதற்குரிய விலையாக பொற்காசுகள் இருக்குமாம். இதனால் இத்தல இறைவனுக்கு ‘படிக்காசுநாதர்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
    புராணக் காலத்தில் நெடுங்குடியில் வில்வ மரங்களும், மண்மலை குன்றுகளும் அதிக மாக இருந்தன. பல்வேறு தலங்களுக்கும் சென்று சிவபெருமானை பூஜித்து வந்த, சகோதரர்கள் இருவர் இந்த தலத்திற்கு வந்தனர். பெருஞ்சீவி, சிரஞ்சீவி என்று பெயர் கொண்ட அவர்கள், அசுரர்களாக இருப்பினும் சிவபெருமானின் பக்தர்களாக விளங்கினர்.

    பெருஞ்சீவி தன் தம்பி சிரஞ்சீவியிடம், வழிபாட்டிற்காக காசியில் இருந்து புனித லிங்கம் எடுத்து வரும்படி கூறினான். அண்ணன் சொன்ன சொல்லை தட்டாமல் தம்பி காசிக்கு சென்றான். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிரஞ்சீவி வந்து சேரவில்லை. இதனால் பெருஞ்சீவி மண்ணால் சிவலிங்கம் ஒன்றைச் செய்து, உரிய நேரத்தில் சிவ வழிபாடு செய்து முடித்தான்.

    இந்த நிலையில் பூஜை முடிந்து வந்த சிரஞ்சீவி, ஏற்கனவே மண்ணால் ஆன லிங்கம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். அண்ணன் ஏற்கனவே பூஜையை முடித்து விட்டதை அறிந்த சிரஞ்சீவி, ‘நான் கொண்டு வந்த லிங்கத்தையும் வைத்து வழிபடுங்கள்’ என்றான்.

    பெருஞ்சீவி, ‘தம்பி! ஈசனுக்குரிய பூஜை காலம் முடிந்து விட்டது. எனவே நீ கொண்டு வந்த லிங்கத்தை வைத்து பூஜை செய்ய இயலாது’ என்றான். ஆனால் சிரஞ்சீவி விடுவதாக இல்லை. இதனால் கோபம் கொண்ட பெருஞ்சீவி, ‘நீ! லிங்கத்தை தாமதமாகக் கொண்டு வந்துள்ளாய். அதை விட இப்போது அடம்பிடிக்கிறாய். இது தவறு’ என்றான். இதையடுத்து அண்ணன்- தம்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது தம்பி சிரஞ்சீவி, ‘நீ மண்ணால் செய்த இந்த லிங்கத்தையும், இந்த மலையையும் அழிக்கிறேன்’ என்று அண்ணனிடம் சபதம் செய்து விட்டு, கயிலாயநாதனை நோக்கி கடும் தவம் இருக்கத் தொடங்கினான். இதனைப்பார்த்த பெருஞ்சீவி கலங்கிப் போனான். இருப்பினும் தனது தம்பியைத் தடுப்பதற்காக, அவனும் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான்.

    அண்ணன்- தம்பி இருவரின் தவத்தால், அவர்கள் இருக்கும் தலத்திற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்று நினைத்த திருமால், சிரஞ்சீவிக்காக ஆதிசேஷனையும், பெருஞ்சீவிக்காக கருடனையும் அனுப்பி வைத்தார்.

    ஆதிசேஷன் பூலோகம் வந்து, பெருஞ்சீவி அமைத்த மண் லிங்கத்தை அசைக்கத் தொடங்கியது. கருடன் அதைத் தடுக்கும் விதமாக மலையைச் சுற்றி வட்டமிட ஆரம்பித்தது. கருடனைக் கண்டதும், ஆதிசேஷன் அங்கிருந்து அகன்று விட்டது. கருடனும் தன் இருப்பிடம் திரும்பியது. அப்போது அசுர சகோதரர்களுக்கு திருமால் காட்சியளித்தார்.

    அப்போது அவர், ‘உரிய காலத்தில் சிவபூஜை செய்வதே சிறந்தது. இதைப்புரிந்து கொண்டு நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் இருந்து ஈசனை வழிபடுங்கள். நீங்கள் சிவபூஜை செய்த இத்தலம் புகழ்ப்பெற்று திகழும். காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கத்தையும் இங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்’ என்று கூறி மறைந்தார்.

    அதன்படியே மண் லிங்கத்தின் பின்னால் காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இத்தல சிவலிங்கம் மண்ணுக்குள் மறைந்தது. பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், சுயம்புவாக வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனியை தரிசித்தனர். அந்த லிங்கத்திற்கு தினமும் ஒரு படி பால் ஊற்றி அபிஷேகம் செய்து வந்தனர்.

    படிக்காசு நாதர், பிரசன்ன நாயகி

    அப்படி முதல் நாள் அபிஷேகம் செய்யப்படும் பாலுக்கு, மறுநாள் இறைவனின் சன்னிதியில் அதற்குரிய விலையாக சிவலிங்கத்தின் அருகில் பொற்காசுகள் இருக்குமாம். இதனால் இத்தல இறைவனுக்கு ‘படிக்காசுநாதர்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. பெருமை மிகுந்த இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகளை, ஜடாய்வர்ம வல்லவ சுந்தர பாண்டியன் என்பவர் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து 13-ம் நூற்றாண்டில் அம்மன் சன்னிதி எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால் காசியிலும், கயிலையிலும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தல இறைவனின் பெயர் கயிலாயநாதர், அம்மனின் திருநாமம் பிரசன்ன நாயகி என்பதாகும்.

    பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதுபோல, இக்கோவிலிலும் கிரிவலம் நடக்கிறது. அடிவாரத்தில் ஈசான்ய வடகிழக்கு திசையில் உள்ள பாம்பாறு நதியில் நீராடி, சுவாமியை தரிசித்தால் நன்மைகள் வந்து சேரும். பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர், இங்கு வந்து ஒரு நாள் தங்கியிருந்து சர்ப்ப நதியில் நீராடி, தேரோடும் வீதிகளில் 5 முறை வலம் வந்து பிரசன்ன நாயகிக்கும் கயிலாசநாதருக்கும் அர்ச்சனை செய்தால் மகப்பேறு உண்டாகும். அதேப் போல் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள பத்மபீடத்தில் அமர்ந்து ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும் அப்படி செய்தால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

    வைகாசி மாதத்தில் 10 நாள் திருவிழா, சுவாதி நட்சத்திரத்தில் தேரோட்டம், ஆனி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் லட்சார்ச்சனை, நவசக்தி அர்ச்சனை, கார்த்திகை முதல் சோமவாரம் சங்காபிஷேகம், நந்தி பகவானுக்கு பிரதோஷ நாட்களில் அபிஷேகம், திருவிளக்கு பூஜை, ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு திருவிழாவும், திருக்கல்யாணமும், மகா சிவராத்திரி என பல நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

    தோஷம் நீக்கும் சிறப்பு பூஜை :

    ஒவ்வொரு தமிழ் மாத முதல் தேதி அன்றும் மாத சங்கரம பூஜை நடைபெறும். இந்த பூஜை காலத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை திருமணமாகாத பெண்கள், சுமங்கலிகள், மற்றும் ஜாதகத்தில் பித்ரு தோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளிட்ட தோஷம் உள்ளவர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் அம்மனுக்கும், சுவாமிக்கும் அர்ச்சனை செய்து கொடிமரத்தின் முன்பு ஐங்கோணக் கோலமிட்டு நெய்தீபம் ஏற்றி ஒரு மனதுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிப்படுகிறார்கள். இவ்வாறு செய்வதால், சகல தோஷங்களும் நீங்கி சுப மங்கலம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அமைவிடம் :

    புதுக்கோட்டையில் இருந்து அரிமளம் வழியாக 30 கிலோமீட்டர் தூரத்திலும், காரைக்குடியில் இருந்து புதுவயல் வழியாக 25 கிலோமீட்டர் தூரத்திலும், அறந்தாங் கியில் இருந்து தேனிப்பட்டி வழியாக 26 கிலோமீட்டர் தொலைவிலும் கீழாநிலைக்கோட்டை உள்ளது. இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரம் சென்றால் நெடுங்குடியை அடையலாம். கோவில் அருகில் செல்லவும் நகரப் பேருந்துகள் உள்ளன.
    பக்தனின் பசியை நீக்க படிக்காசு வழங்கிய சொர்ணபுரீஸ்வரர், தன்னை நம்பி வரும் அன்பர்களின் வறுமையைப் போக்கி வளமையைக் கூட்டுவார் என்பது திண்ணம்.
    தென்னை தாலாட்டித் தென்றல் தவழும் சோலைகளுக்கிடையே உள்ள ராஜகோபுரம் ‘வாருங்கள்’ என்று நம்மை வரவேற்கிறது.

    சோழநாட்டிற்குச் சொந்தமான காவிரியின் வளத்தால் செழிக்கும் பச்சை வயல்களுக்கு இடையே கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருத்தலம்தான் அரிசில் கரைப்புத்தூர். அரிசலாற்றின் தென்கரையில் இருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம்.

    கும்பகோணத்தில் இருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. நாச்சியார்கோவில் என்னும் சைவ- வைணவத் தலத்தில் இருந்து வடமேற்கே 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அழகாபுத்தூர் என்னும் அரிசில் கரைப்புத்தூர். பெயருக்கேற்ப நகர நாகரிகம் இன்னும் தொற்றிக் கொள்ளாத அழகிய சிற்றூர்.

    மேற்கு நோக்கி நிற்கும் ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்தால், பலிபீடம், கொடி மரம், நந்தி தேவர் அவரின் உத்தரவைப் பெற்று சென்றால், மிகப் பெரிய மண்டபத்தில் மூலவர் முக்கண்ணன் சுயம்பு லிங்கமாகத் தனிச் சன்னிதியில் மேற்கு திசை பார்த்து எழுந்தருளியுள்ளார். அதிலும் தாமரை போன்ற ஆவுடையாரில் லிங்கம் தோன்றுவது கண்ணுக்கு விருந்தாகும்.

    இத்தல இறைவனான சொர்ணபுரீஸ்வரர், பொன்னை அள்ளித்தரும் வள்ளலாக விளங்குகிறார். இந்தப் பெருமானுக்கு ‘படிக்காசுநாதர்’ என்ற சிறப்பு பெயரும் உண்டு.

    அதென்ன படிக்காசு நாதர்...

    திருவீழிமிழலை என்ற சிவத்தலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது அப்பருக்கும், சம்பந்தருக்கும் படிக்காசு வழங்கியதும் ‘வாசி தீரவே காசு நல்குவீர்’ என்று ஆளுடைப்பிள்ளை பதிகம் பாடியதும் நாமறிந்த கதை தான்.

    வைத்தீஸ்வரன் கோவிலிலும் ஒரு ஏழைப் புலவனுக்கு படிக்காசு தந்ததாக வரலாறு உண்டு. அதனால் அவர் படிக்காசுத் தம்பிரான் என்றே அழைக்கப்பட்டார்.

    ஆனால், அரிசில் கரைப்புத்தூரில், ஆதி சைவர் குலத்தில் எழுந்த அடியவர் ஒருவர், தினமும் ஆகம முறைப்படி சிவபெருமானுக்குப் பூஜை செய்து வந்தார்.

    அக்காலத்தில் பஞ்சம் வந்து மக்கள் பசி நோயால் மிகவும் துயரமுற்றனர். அப்படி இருக்க, இந்த ஏழை பக்தர் மட்டும் செல்வத்தில் செழிப்பாரா என்ன?

    அடியாரும் பசியும், பட்டினியும் ஆட்கொள்ள மிகவும் மெலிவுற்றார். இருந்தும் ஈசன் பணியை இடையறாது செய்து வந்தார்.

    நீர் கொண்டுவந்து சிவனை அபிஷேகம் செய்து மணமிக்க மலர்களால் அர்ச்சித்து, நைவேத்தியம் செய்து வழிபாடு நடத்தினார். தான் உணவின்றி உடல் தளர்ந்த போதும், உள்ளம் தளராமல் சிவத் தொண்டு புரிந்து வந்தார்.

    பசியால் அவரால் நடக்கவே முடியவில்லை. தள்ளாடித் தள்ளாடி தண்ணீர் குடத்தை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து சிவலிங்கம் மீது முழுக்காட்டும் போது, கைகளில் வலு இல்லாமையால் குடத்தை சிவ சிரசின் மீது போட்டு விட்டு மயக்கமடைந்து விட்டார்.

    பிறகு உணர்வு வந்து மெல்லக் கண் விழித்தபோது சிவன் தலையில் குடத்தைப் போட்டு விட்டதை எண்ணிக் கலங்கினார்.

    கருணை கடலான பரமன், ‘அன்பனே! விரைவில் மழை பொழிந்து நாடு செழிப்புறும், அதுவரை உமது பஞ்சம் தீர, நாள் தோறும் இங்கே ஒரு காசு வைப்போம். அதைக் கொண்டு ஜீவனம் செய்து கொள்’ என்றார்.

    சொன்னது போலவே இறைவனது பீடத்தின் கீழ் ஒரு பொற்காசு இருக்கக் கண்டு, அதனால் தானும் பசிதீர்த்து, மற்றவர்களுக்கும் உதவி செய்து வந்தார். சிவதொண்டையும் விடாமல் செய்து வந்தார்.



    பல ஆண்டுகள் வாழ்ந்து பூஜைகள் செய்து அங்கேயே முக்தி அடைந்தார்.

    அந்த அடியவர் வேறு யாருமல்ல.. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான ‘புகழ்த்துணை நாயனார்.’

    இவரைப்பற்றி பெரியபுராணம் கீழ்க்கண்ட பாடலால் விளக்குகிறது.

    ‘அகத் தடிமைசெய்யும் அந்தணன்தான்
    அரிசில்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
    மிகத்தணர் வெய்திக் குடந்தையும் நும்
    முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும்
    வகுத்தவனுக்கு நித்தற் படியும்
    வருமென்றொரு காசினை நின்றநன்றிப்
    புகழ்த்துணை கைப்புகச் செய்து தந்தீர்
    பொழியார் திருப்புத்தூர்ப் புனிதரே’ என்கிறது அந்தப் பாடல்.

    சிவலிங்கத்தின் உச்சியில் குடம் விழுந்த தழும்பு காணப்படுகிறது.

    இத்திருக் கோவிலின் மண்டபத்தில் இறைவன் சன்னிதி அருகே, புகழ்த்துணை நாயனார் கூப்பிய கரங்களுடன் சிலை வடிவில் இருந்து பக்தியைப் பறைசாற்றுகின்றார்.

    இதே மண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னிதியில் இறைவி ‘அழகிய நாயகி’ என்ற நாமம் தாங்கி அருள்கிறார். இந்த ஆலயத்தில் விநாயகர், முருகப்பெருமான், கஜலட்சுமி, பைரவர், நால்வர், நவக்கிரகங்கள் சிலைகளாக அருள்பாலிக்கின்றனர்.

    வில்வ மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட இந்த புனிதப்பதிக்கு, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவரும் எழுந்தருளி தரிசித்து ஒவ்வொருவரும் ஒரு பதிகம் பாடியுள்ளதால் மூவரின் தேவாரப் பாடல் பெற்ற தலமாகப் பெருமை பெருகிறது.

    சங்கு சக்கர முருகன்


    பொதுவாக சில திருக்கோவில்களில் முருகனை வேல் தாங்கிய வராகவும், தண்டாயுதம் தரிந்தவராகவும், சில கோவில்களில் வில் ஏந்தியவராகவும் தரிசித்திருக்கிறோம். ஆனால் இத்திருக் கோவிலின் வெளிச்சுற்றில் வடமேற்கில் தனிக்கோவிலில் ‘ஓம்’ என்ற பிரணவ எழுத்தில் ஆறு முகங்களுடன், முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் அருள்கிறார்.

    அவர் கையில் மாமன் திருமாலைப் போல சங்கு சக்கரம் ஏந்தி தோன்றுவது எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும். அங்கே வள்ளி- தெய்வானை இருபுறமும் இருக் கின்றனர். திருமணம் வரம் கேட்பவர்கள், குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் அமாவாசை தினத்தில் சங்கு சக்கர ஆறுமுகப்பெருமானை வழிபட்டால் காரியம் கைகூடும் என்பது அன்பர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    பக்தனின் பசியை நீக்க படிக்காசு வழங்கிய சொர்ணபுரீஸ்வரர், தன்னை நம்பி வரும் அன்பர்களின் வறுமையைப் போக்கி வளமையைக் கூட்டுவார் என்பது திண்ணம். 
    ×